புதன், 26 ஜனவரி, 2022

இல்லுமினாட்டி

 





என்.கணேசனின் “இல்லுமினாட்டி” நாவல் அவரது இருவேறு உலகம் நாவலின் இரண்டாம் பாகமாகும். இந்த நாவலின் இன்னொரு முக்கிய அம்சம் அமானுஷ்யன் கதாபாத்திரமாக இதிலும் வருகிறான். (இதற்கு முன் அமானுஷ்யன், புத்தம் சரணம் கச்சாமி நாவலில் வந்துள்ளான்).  இல்லுமினாட்டி நாவல் ஜனவரி 2020ல் ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. மிகவும் பரபரப்பும், விறுவிறுப்பும் நிறைந்த இந்த நூலின் முதல் இரண்டு அத்தியாயங்கள் வாசகர்களுக்காக இலவசமாய் இங்கே -


இல்லுமினாட்டி 

 என்.கணேசன்


1

 

வன் பெயர் என்னவென்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அளவுக்கு அதிகமாய் போதை மருந்தை உட்கொண்டு ம்யூனிக் நகரத்  தெரு ஒன்றில் விழுந்து கிடந்த அவனை அந்த அரசு மருத்துவமனையில் இன்று காலை தான் போலீசார் சேர்த்திருந்தார்கள். அவனை அடையாளம் காட்டக்கூடிய ஆவணம் எதுவும் அவனிடம் இருக்கவில்லை. ஆறடி உயரமும், ஒடிசலான உடல்வாகும் கொண்டிருந்த அவன் முகவாய்க்கட்டையில் ஒரு ஆழமான கீறல் இருந்ததுஅந்த மருத்துவமனையின் மருத்துவர் குழு அவன் ஆசியாவைச் சேர்ந்தவனாக இருக்கலாம் என்றும், அவன் வயது முப்பதுக்குள் இருக்கும் என்று கணித்திருந்தது. நீண்ட கால போதைப் பழக்கத்தினால் முன்பே கெட்டிருந்த அவன் உடல்நிலை கடைசியாக உட்கொண்ட அதிக போதை மருந்தால், மருத்துவமனையில் சேர்த்த போதே, அபாயக்கட்டத்தில் தான் இருந்தது.

அவனைப் பரிசோதித்த தலைமை மருத்துவர் அவனைச் சேர்த்த போலீசாரிடம் காலையிலேயே சொல்லியிருந்தார். “இவன் உயிர்பிழைக்க வாய்ப்பில்லை. இவன் குடும்பத்தைக் கண்டுபிடிக்க முடிந்தால் தெரிவித்து விடுங்கள்….”

இவன் இந்த நகரத்தைச் சேர்ந்தவன் போலத் தெரியவில்லை. எங்கிருந்தோ இங்கு வந்திருக்கலாம்…..  இவன் புகைப்படத்தைப் பத்திரிக்கைகளுக்கும் டிவி சேனல்களுக்கும் அனுப்பி இவன் இங்கிருப்பதைத் தெரிவிக்கிறோம்என்று சொன்னார்கள்.

அவர்கள் சொன்னபடியே இப்போது மாலை நாலரை மணிச் செய்தியில் அவன் படம் டிவியில் காட்டப்படுவதை தலைமை மருத்துவர் பார்த்தார். மருத்துவமனையின் விலாசத்தையும், தொலைபேசி எண்களையும் கூடவே தெரிவித்திருந்தார்கள். இதைப் பார்த்து விட்டு யாராவது இங்கு வரலாம். அல்லது தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று நினைத்தபடியே தலைமை மருத்துவர் கண்ணாடி ஜன்னல் வழியே வெளியே பார்த்தார்.

அவரது அறை இரண்டாவது மாடியில் இருந்ததால் தெரு முழுவதும் தெளிவாகத் தெரிந்தது. தெருக்கோடியில் ஒரு பெரிய கட்டிடத்தின் முன்பு ஒரு கருப்புக்கார் அப்போது தான் வந்து நின்றது. ஆஜானுபாகுவாக ஒருவன் இறங்கியதும், அவனைத் தொடர்ந்து கண்கள் கருப்புத்துணியால் கட்டப்பட்ட ஒரு இளைஞன் இறங்கினான். அவனைத் தொடர்ந்து இன்னொரு ஆஜானுபாகுவான ஆள் இறங்கினான். அவர் கூர்ந்து பார்ப்பதற்கு முன்பே அவர்கள் மூவரும் அந்தக் கட்டிடத்திற்குள் போய் விட்டார்கள்.

தலைமை மருத்துவருக்கு அந்தத் தெருக்கோடிக் கட்டிடமே ஏதோ ரகசியங்களும், ஆபத்தும் நிறைந்த இடமாகத் தோன்றியது. இன்று பிற்பகல் சுமார் மூன்று மணி அளவில் மிக விலை உயர்ந்த கார்கள் வரிசை வரிசையாக அங்கு வந்து சேர்ந்ததை அவர் கவனிக்க நேர்ந்தது. கார்களில் இருந்து இறங்கி உள்ளே சென்ற அனைவரும் செல்வந்தர்களாகவும், அதிகாரங்கள் படைத்தவர்களாகவும் தோன்றியிருந்தார்கள்….. இப்போது கண்களைக் கட்டி யாரையோ அழைத்துக் கொண்டு போகிறார்கள். அங்கு என்ன நடக்கிறது, நடத்துபவர்கள் யார் என்பதெல்லாம் தெரியவில்லை….

 

அவர் சிந்தனைகளைக் கலைத்தபடி நர்ஸ் ஒருத்தி அந்த அனாமதேய போதை மனிதனின் ஸ்கேன் ரிப்போர்ட்களை அவர் மேசையில் வைத்து விட்டுப் போனாள். தலைமை மருத்துவர் ஒருவித சலிப்புடன் வந்து தன் இருக்கையில் அமர்ந்தார். சிறிது நேரத்தில் அந்தப் பெயர் தெரியாத போதை மனிதன் சாகப்போகிறான் என்றாலும் அவனுடைய எல்லா ரிப்போர்ட்களையும் ஃபைல் செய்து பத்திரப்படுத்தி வைக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் அவை தேவைப்படலாம். உறவினர்கள் யாராவது வழக்கு போடும் வாய்ப்பும் இருக்கிறது. இறந்தும் அந்த மனிதன் பிரச்னையாகலாம்…..

அவர் அவனுடைய எல்லா ஸ்கேன் ரிப்போர்ட்களையும் பிரித்துப் பார்த்தார். அவன் பெயர் தெரியாததால் அந்த எல்லா ரிப்போர்ட்களிலும் பெயர் மிஸ்டர் எக்ஸ் என்றே இருந்தது. தலைமை மருத்துவர் முகத்தில் சின்னதாய் புன்னகை அரும்பியது. அவர் அந்த ரிப்போர்ட்களைப் படிக்க ஆரம்பித்தார். அந்த பரிசோதனைக் குறிப்புகள் எல்லாமே அவர் முன்பே எண்ணியிருந்தபடி மிக மோசமாகவே இருந்தன. அந்த ஆள் மரணத்தை நெருங்கி விட்டான். இனி அதிகபட்சம் ஓரிரு மணி நேரங்கள் தான் அவன் உயிரோடிருக்கும் வாய்ப்பிருக்கிறது…. அவன் இறந்த பின்னும் யாரும் உறவினர்கள் வரா விட்டால் அவன் பிணத்தை என்ன செய்வது என்பதை யோசிக்க வேண்டும். அதில் நிறைய சட்டச்சிக்கல்கள் இருக்கின்றன. எல்லாம் விதிமுறைகளின்படி தான் கவனமாகச் செய்தாக வேண்டும்…..

தலைமை மருத்துவர் அந்தப் போதை மனிதனின் உடல்நிலை குறித்த ரிப்போர்ட்களை எல்லாம் தொகுத்து ஒரு சுருக்கமான அறிக்கை ஒன்றைத் தயார் செய்ய ஆரம்பித்தார். அவன் இறந்தவுடன் அவனைக் காலையில் சேர்த்து விட்டுப் போன போலீஸ்காரர்களுக்குப் போன் செய்து வரவழைத்து அவர்களிடம் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துப் பேச வேண்டும்….

திடீரென்று எங்கிருந்தோ கிதார் இசை லேசாகக் கேட்க ஆரம்பித்தது. அந்தக் கிதார் இசை இனிமையாக இருந்த அதே நேரத்தில் சற்று அமானுஷ்யமாகவும் இருந்தது போல அவர் உணர்ந்தார். சில நிமிடங்களில் நர்ஸ் ஒருத்தி வேகமாக அவர் அறைக்குள் வந்து சொன்னாள். “டாக்டர் அந்தப் போதை மனிதன் எக்ஸ் கிட்டத்தட்ட இறந்து விட்டான் போல இருந்தது. அவனுடைய இதயத்துடிப்பு எல்லாம் குறைந்து கொண்டே வந்தது. ஆனால் திடீர் என்று இப்போது அவனுக்கு ஜன்னி வந்தது போல் உடம்பெல்லாம் நடுங்குகிறது…..”

சிலருக்கு மரணத்திற்கு முன்பு அப்படி ஆவது உண்டு என்பதால் தலைமை மருத்துவர் ஆச்சரியப்படவில்லை. அவன் அருகில் யார் இருக்கிறார்கள் என்று அவளிடம் விசாரித்தார். அவள் உதவி மருத்துவர் ஒருவரின் பெயரைச் சொன்னவுடன் அவர் திருப்தியடைந்தார். இப்போது அந்தக் கிதார் இசை தான் அவரைக் குழப்பியது.

எங்கிருந்து இந்த கிதார் இசை கேட்கிறது?” என்று அவர் நர்ஸைக் கேட்டார். அவள் கண்களை மூடிக் கவனமாக அந்த இசை வரும் இடத்தை யூகிக்க முயன்றாள். முயற்சி செய்தும் அவளுக்கு முடிவாகச் சொல்ல முடியவில்லை. பக்கத்தில் தான் யாரோ வாசிப்பது போல அவளுக்குத் தோன்றியது. ஆனால் அந்தபக்கத்தைஉறுதியாக அவளால் சுட்டிக் காட்ட முடியவில்லை…. “சரியாகத் தெரியவில்லைஎன்று தயக்கத்துடன் சொல்லி விட்டுப் பிறகு அதற்கு அதிக முக்கியத்துவம் எதுவும் தராமல் அவள் போய் விட்டாள்.

தலைமை மருத்துவர் எழுந்து போய் கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார். வெளியே பார்வைக்குப் படுவது போல் யாரும் கிதார் வாசித்துக் கொண்டிருக்கவில்லை. ஏனோ அவர் தெருக்கோடியில் இருந்த அந்தப் பெரிய கட்டிடத்தைப் பார்த்தார். அங்கும் கட்டிடத்திற்கு வெளியே யாரும் தெரியவில்லை. கண்களை மூடி அவரும் கிதார் இசை வரும் இடத்தை அறிய முயன்றார். இந்த மருத்துவமனைக்குள்ளேயே தான் அந்த இசை கேட்பது போல் இருந்தது.

இந்த இசை எங்கிருந்து கேட்டால் நமக்கென்னஎன்பது போல தோள்களைக் குலுக்கிக் கொண்டு அவர் மறுபடியும் அந்த அறிக்கை தயாரிக்கும் வேலையைத் தொடர்ந்தார். கால் மணி நேரத்திற்குப் பின் எக்ஸ் அருகே இருந்த அந்த உதவி மருத்துவரே வந்தார். ”அவன் பிழைத்துக் கொள்வான் போலிருக்கிறது டாக்டர். அவன் உடல்நிலையில் கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேற்றம் தெரிய ஆரம்பித்திருக்கிறது…..”

தலைமை மருத்துவர் திகைப்புடன் அவரைப் பார்த்தார். அவர் முன்னால் இருக்கும் ரிப்போர்ட்கள் எதிலும் அவன் பிழைத்துக் கொள்வதற்கான அறிகுறிகள் ஒரு சதவீதம் கூட இருக்கவில்லை….. அவர் குழப்பத்துடன் மெல்ல எழுந்தார். கிதார் இசை இப்போதும் கேட்டுக் கொண்டு தானிருந்தது.

இருவரும் சேர்ந்து மிஸ்டர் எக்ஸ் இருக்கும் பகுதியை நோக்கிச் செல்கையில் தலைமை மருத்துவர் அந்த உதவி மருத்துவரிடம் கேட்டார். “கிதார் இசை எங்கேயிருந்து கேட்கிறது?”

உதவி மருத்துவர் சொன்னார். “இந்த ஆஸ்பத்திரியிலேயே யாரோ வாசிக்கிற மாதிரி தான் தெரிகிறது…. எங்கேயிருந்து என்று சரியாகத் தெரியவில்லை…”

அடுத்த சில நிமிடங்களில் தலைமை மருத்துவர் அந்தக் கிதார் இசை உட்பட அனைத்தையும் மறந்து போனார். மிஸ்டர் எக்ஸின் உடலில் தெரிய ஆரம்பித்த மாற்றங்கள் இது வரை அவர் படித்திருந்த மருத்துவத்தைக் கேலி செய்வது போல் இருந்தன. அவர் போன போது அவன் உடலின் வெப்பம் அபாயக்கட்டத்தையும் மீறி அதிகமாக இருந்தது. உடல் அனலாய் கொதித்தது. தர்மாமீட்டர் 106 டிகிரி ஃபாரன்ஹீட் காட்டியது. ஆனால் அதனால் அவன் உடல் எந்தப் பெரிய பாதிப்புக்கும் ஆளாகவில்லை. மிகக்குறைவாக இருந்த இதயத்துடிப்பு சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டு வந்தது. தலைமை மருத்துவருக்கு அவன் உடலில் அசாதாரணமாக என்னென்னவோ நடந்து கொண்டிருப்பது போல் தோன்றியது. ஆனால் எதுவுமே அவன் வாழ்க்கையை முடிக்கிற விதமாய்த் தெரியவில்லை….

திடீரென்று அவன் கண் விழித்தான். அவன் கண்கள் அமைதியாக அவர்களைப் பார்த்தன.

தலைமை மருத்துவர் குனிந்து அவனிடம் கேட்டார். “நீ யார்? உன் பெயர் என்ன?”

 

2

 

லைமை மருத்துவர் நீ யார், உன் பெயர் என்ன என்று கேட்டதற்கு அந்தப் போதை மனிதன் எந்தப் பதிலையும் சொல்லவில்லை. சின்னதாய் புன்னகை அவன் உதடுகளில் வந்து மறைந்தது. ஏனோ அந்தப் புன்னகை அவர் ரத்தத்தை உறைய வைப்பது போல் வில்லத்தனமாய் இருந்தது. உடனே அவர் அப்படி உணர்வது அர்த்தமில்லாதது என்று நினைத்தார். உண்மையில் அவர் கேட்ட கேள்வி அவன் மூளையை எட்டியிருக்காது என்று அவருக்குத் தோன்றியது. இது போன்ற அதிகபட்ச காய்ச்சல் சமயத்தில் இப்படி நடப்பதுண்டு. ஏதோ ஒரு கற்பனைக் காட்சியில் நோயாளி சஞ்சரிப்பதுண்டு. அவன் கற்பனையில் என்ன பார்த்துப் புன்னகைக்கிறானோ என்று எண்ணியவராக அவர் மறுபடி அவனிடம் கேட்டார். “நான் கேட்டது புரிகிறதா? நீ யார்? உன் பெயர் என்ன?”

அவன் ஒன்றும் சொல்லாமல் கண்களை மூடிக் கொண்டான். களைத்திருக்கிறான் என்பதாகத் தலைமை மருத்துவர் புரிந்து கொண்டார். நினைவு திரும்பி அவன் பெயரைச் சொல்லும் வரை அவன் எக்ஸ் தான்முதலில் அவன் காய்ச்சலைக் குறைக்க வேண்டும், பின் அவன்  உடலில் சக்தியை அதிகரிக்க வேண்டும், பிறகு தான் அவனுக்குச் சரியாக நினைவு திரும்பும் வாய்ப்பு இருக்கிறது…. அதற்கான மருந்துகளை அவன் உடலில் ஏற்ற உதவி மருத்துவரிடம் உத்தரவிட்டு விட்டுத் தன் அறைக்கு அவர் திரும்பினார்.

மறுபடியும் தன் மேசையிலிருந்த எல்லா ஸ்கேன் ரிப்போர்ட்களையும் அவர் எடுத்துப் படித்தார். முன்பு அவர் அனுமானத்திற்கு வந்திருந்தபடியே ஒரு ரிப்போர்ட்டில் கூட அவன் உயிர்பிழைக்கும் வாய்ப்பின் தடயம் கூட இல்லை. இவன் பிழைத்துக் கொண்டால் மருத்துவ உலகில் ஒரு அதிசயம் நிகழ்த்தியவனாகக் கருதப்படுவான் என்று தோன்றியது. உடனே அவர் இண்டர்காமில் அழைத்து அவன் உடல்நிலை ஓரளவு இயல்புநிலைக்குத் திரும்பியவுடன்  மறுபடியும் ஸ்கேன்கள் செய்யச் சொன்னார்.

அவர் பார்வை கண்ணாடி ஜன்னல் வழியே வீதிக்கு போனது. இப்போது விலை உயர்ந்த கார்கள் அந்தத் தெருக்கோடிக் கட்டிடத்திலிருந்து சாரை சாரையாக வெளியே வந்து கொண்டிருந்தன.  அதைப் பார்த்தபடி சிறிது நின்று விட்டுப் பின் மற்ற நோயாளிகளைப் பார்க்க அவர் கிளம்பினார். திடீர் என்று கிதார் இசை நினைவுக்கு வந்தது. இப்போது அது கேட்கவில்லை. எப்போது நின்றது என்று தெரியவில்லைஎன்னவோ எல்லாமே விசித்திரமாய் நடக்கின்றன என்று எண்ணியவர் அடுத்த ஒன்றரை மணி நேரம் எல்லா நோயாளிகளையும் பார்த்து விட்டு வரும் வரை மற்ற எல்லாவற்றையும் மறந்திருந்தார். கடைசியாக மறுபடியும் எக்ஸ் அறைக்குப் போனார்.

அவரைப் பார்த்தவுடன் அந்த உதவி மருத்துவர் சொன்னார். “ஒரு கட்டத்தில் 107 டிகிரி வரை ஏறிய காய்ச்சல் இப்போது தான் குறைய ஆரம்பித்திருக்கிறது. 103 டிகிரிக்கு வந்திருக்கிறது. ஆனால் ஒரு மணி நேரத்திற்கு முன் எடுத்த மூளையின் ஸ்கேன் ரிப்போர்ட்கள் குழப்புகின்றன டாக்டர். அசாதாரணமான அதிகப்படியான செயல்கள் மூளையில் தெரிகின்றன…..”

அவர் சொல்லிவிட்டு ஸ்கேன் படங்களைக் காட்டிய போது தலைமை மருத்துவர் திகைப்பின் எல்லைக்கே போனார். அவர் அறையில் இருந்த ரிப்போர்ட்டுகளுக்கு நேர்மாறாக உச்சக்கட்ட அளவில் மூளைச் செயல்பாடுகள் இருந்தன. அவர் சொன்னார். “ஸ்கேனிங் மெஷினில் ஏதாவது பிரச்னை இருக்குமோ?”

உதவி மருத்துவர் சொன்னார். “நானும் அதைத் தான் கேட்டேன். ஸ்கேன் ஆபரேட்டர் மெஷின் சரியாகத் தான் இருக்கிறது, இந்த எக்ஸ் சூப்பர் மேனாக இருக்கலாம். யார் கண்டது என்று கிண்டலாகச் சொல்கிறான்….”

எக்ஸ் விஷயத்தில் எங்கோ ஏதோ குழப்பும்படியான தவறுகள் அல்லது பிரமிக்கும்படியான அதிசயங்கள் நடந்திருப்பதாக தலைமை மருத்துவர் நினைத்தார். 107 டிகிரி வரை ஏறிய காய்ச்சலும், மூளையின் அளவுக்கதிகமான செயல்பாடுகளும், சாகக்கிடந்த அவன் உயிர் பிழைத்திருப்பதும் ஒன்று சேர்த்துப் பார்க்கும் போது தலைசுற்றியது. இவன் இயல்புநிலைக்குத் திரும்பி வாய்திறந்து பேசினால் தான் பல விஷயங்கள் புரியும் என்று அவருக்குத் தோன்றியது.

தலைமை மருத்துவர் எக்ஸ் அருகே சென்று பார்த்தார். இப்போது அவன் உடல் சீரடைந்து வருவதாகத் தோன்றியது. மூச்சு சீராக இருந்தது. அவர் உதவி மருத்துவரிடம் சொன்னார். “அவன் இரவு நன்றாக உறங்கி ஓய்வு எடுக்கட்டும். நாளை காலையில் அவனிடம் பேசுவோம்…..”

அவர் வீட்டுக்குக் கிளம்பி விட்டார். செல்வதற்கு முன் ரிசப்ஸனில் எக்ஸைக் கேட்டு யாராவது போன் செய்தார்களா என்று கேட்டார். இல்லை என்று பதில் வந்தது. அவன் வீட்டார், நெருங்கியவர்கள் யாரும் டிவியில் அவனைக் குறித்து வெளியிட்ட செய்தியைப் பார்க்கவில்லை போல் இருக்கிறது….

 

டுத்தநாள் அதிகாலையிலேயே அவருடைய அலைபேசி இசைத்து அவரை உறக்கத்திலிருந்து எழுப்பியது. அவர் சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தார். காலை மணி 5.05. அலைபேசியை எடுத்துப் பார்த்தார். அழைப்பு மருத்துவமனையிலிருந்து தான் வருகிறதுபேசினார். “ஹலோ

நர்ஸ் ஒருத்தி பேசினாள். “டாக்டர், அந்தப் போதை நோயாளி எக்ஸைக் காணோம்

திகைத்த அவர் ஒரு நிமிடம் ஒன்றும் சொல்லாமல் யோசித்தார். சில சமயங்களில் இது போன்ற ஆட்கள் மயக்கநிலையில் எழுந்து நடப்பதுண்டு. வேறெதாவது அறைக்குச் சென்று படுத்திருக்கும் வாய்ப்பும் இருக்கிறது என்று நினைத்தவராக அவர் கேட்டார். “ஆஸ்பத்திரியில் எல்லா இடங்களிலும் தேடினீர்களா?”

எல்லா இடங்களிலும் பார்த்து விட்டோம் டாக்டர். இங்கு எங்கும் இல்லை

எக்ஸ் ஏன் இப்படிப் படுத்துகிறான் என்று எண்ணியபடி அவர் சொன்னார். “போலீஸுக்கும் போன் செய்து தகவலைத் தெரிவித்து விடுங்கள். நான் அரை மணி நேரத்தில் வந்து விடுகிறேன்.”

அவர் மருத்துவமனைக்குப் போய்ச் சேர்ந்த சமயம் எக்ஸை அங்கு கொண்டு வந்த போலீஸார் இருவரும் வந்து சேர்ந்தார்கள். அவர்களிடம் நேற்றைய அதிசய நிகழ்வுகளை அவர் தெரிவித்தார். அவர்கள் இருவரும் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் அவர் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டார்கள்பின் எக்ஸை யார் கடைசியாக எப்போது பார்த்தார்கள் என்று விசாரித்தார்கள். உதவி மருத்துவர் இரவு 10.30க்கு காய்ச்சல் எந்த அளவு இருக்கிறது என்று பரிசோதித்ததாகவும் அப்போது 99 டிகிரிக்கு காய்ச்சல் இறங்கி இருந்ததாகவும் சொன்னார். நர்ஸ் ஒருத்தி நள்ளிரவு ஒன்றரை மணிக்கு அறைக்கு வந்த போது எக்ஸ் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததைப் பார்த்ததாகச் சொன்னாள்.

கடைசியில் ஒரு போலீஸ்காரர் சொன்னார். “அந்த நேரத்திற்குப் பிறகு சிசிடிவி காமிராவில் பார்த்தால் என்ன நடந்திருக்கிறது என்று தெரியும்.”

அறைகளில் சிசிடிவி காமிராக்கள் இல்லை என்றாலும் வராந்தாக்களில் அந்தக் காமிராக்கள் இருந்தன. அறையை விட்டு யார் வந்தாலும், அறைக்குள் யார் சென்றாலும் அந்தக் காமிராக்களில் கண்டிப்பாகப் பதிந்திருக்கும் என்பதால் பரபரப்புடன் அந்த அறைக்கு வெளியே இருந்த வராந்தாவில் இரவு ஒன்றரை மணிக்குப் பிறகு பதிவாகி இருந்த சிசிடிவி காமிரா பதிவுகளைப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

காமிராப்பதிவுகள் காலி வராந்தாவையே அதிகம் காட்டியது. நீண்ட இடைவெளிகளில் ஒரு நோயாளியோ, அவர் உடனிருப்பவரோ, நர்ஸ்களோ வராந்தாவில் தெரிந்தார்கள். ஆனால் அவர்கள் வந்து போனது வேறு அறைகளிலிருந்து தான்யாரும் எக்ஸ் அறையிலிருந்து வெளியே வரவோ, உள்ளே போகவோ இல்லைதிடீரென்று எக்ஸின் அறையிலிருந்து எக்ஸ் வெளியே எட்டிப் பார்ப்பது தெரிந்தது. உடனே அவர்கள் அந்தக் காமிராப்பதிவு காட்டிய நேரத்தைப் பார்த்தார்கள். காலை மணி 3.37.

வெளியே வராந்தாவில் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவுடன் எக்ஸ் மெல்ல நடக்க ஆரம்பித்தான். அவன் வராந்தாவைத் தாண்டிய காட்சி முடிந்ததும் மற்ற தொடர்பகுதிகளின் காமிராப்பதிவுகளை அவர்கள் பார்த்தார்கள். அவன் ஒரே ஒரு பகுதியில் மட்டும் ஒரு நர்ஸ் வருவதைப் பார்த்து மறைந்து நின்றான். அவள் ஒரு அறைக்குள் நுழைந்தவுடன் வேகமாக அந்த அறையைக் கடந்தான். கடைசியில் மணி 3.48ல் அவன்  மருத்துவமனையை விட்டு வெளியேறுவது தெரிந்தது.

ஒரு போலீஸ்காரர் சொன்னார். “கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கு முன்பே ஆஸ்பத்திரியை விட்டுப் போய் விட்டான்….”

இன்னொரு போலீஸ்காரர் தலைமை மருத்துவரிடம் சொன்னார். ”அவன் பிழைக்க வழியே இல்லை என்றீர்கள். ஆனால் அவன் பிழைத்துக் கொண்டது மட்டுமல்ல ஒரே நாளில் உங்கள் ஆஸ்பத்திரியை விட்டு அவனாகவே நடந்து வெளியே போயிருக்கிறான்

தலைமை மருத்துவர் சொன்னார். “நேற்றிலிருந்து அவன் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்துக் கொண்டே இருக்கிறான். இனி நான் அவன் சிகிச்சைக் கணக்கை எப்படி மூடுவது? அவன் செத்திருந்தாலாவது அனாமதேய போதை மனிதன், அனாதைப் பிணம் என்று எழுதி முடித்திருப்பேன்

கவலைப்படாதீர்கள். உயிர் போகிற அளவுக்கு போதை மருந்து சாப்பிட்ட ஆள் அந்தப் பழக்கத்திற்கு அடிமையானவன் என்பதால் கண்டிப்பாக சீக்கிரமே மறுபடி சாப்பிட்டு எங்கேயாவது விழுந்து கிடப்பான். அல்லது செத்தும் கிடக்கலாம். அப்போது பார்க்கலாம்…. அவன் இங்கே இருந்த சமயத்தில் வேறெதாவது வித்தியாசமாக நடந்திருக்கிறதா?...”

தலைமை மருத்துவர் சொன்னார். “யாரோ நிறைய நேரம் கிதார் வாசித்துக் கொண்டிருந்தார்கள். அது ஆஸ்பத்திரிக்குள்ளேயே வாசித்தது போல் தான் இருந்தது. அது யார் என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அது எக்ஸுக்கும் சம்பந்தமில்லாத விஷயமாக இருக்கலாம். ஆனால் நாங்கள் எல்லோரும் காதால் கேட்டும், ஒருவராலும் அது எங்கிருந்து கேட்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது விசித்திரமாக இருந்தது….”      


---- மீதியை நாவலில் படித்துக் கொள்ளலாம். விலை ரூ.650/-                                        

ஆன்லைனில் அமேசானில் இந்த அச்சு நாவலை வாங்கலாம். லிங்க்-

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


 நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக